தமிழரின் வாழ்வோடு இசையும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை அறியும் வண்ணம் தமிழிசைக்கு வரலாறு இருக்கிறது. இசைத்தமிழின் வளம் சிறப்புற்று இருந்துள்ளது என்பதை தொல்காப்பியம் முதல் இக்கால இலக்கியங்கள் வரை பல கூறுகள் தமிழில் காணப்படுகி்ன்றன. இசைத்தமிழின் குறிப்புகளை ஒவ்வொரு இலக்கியமும் அதனதன் தேவைக்குத் தக்கவாறு தன்னுள் கொண்டுள்ளது. “திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்" என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தமிழ் மொழியின் சொற்றொடர்களை இனிமையான இசையாக பாடிட மானிடப் பிறவிக்கு மட்டுமே வரமாக வாய்க்கப்பெற்றுள்ளது சிறப்பாகும்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் தமிழிசையின் சிறப்பினை முதன்முதலாகக் கோடிட்டுக் காட்டியவர் ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர். தமிழிசை இலக்கண நூல் ஒன்று இல்லை என்ற குறைதீர்த்த முதல் நூல் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரம் ஆகும். ஆபிரகாம் பண்டிதர் காலத்தில் இசைக் கலைஞர்கள் மற்றும் தமிழிசைப் பாடகர்கள் எல்லோரும் தெலுங்குப் பாடல்களையே பாடிவந்தனர். அந்தச் சூழ்நிலையில் மரபு வழி நின்று இசைப் பயிற்சிக்குரிய இசை உருப்படிகள் தமிழில் அமைய வேண்டும் எனப் பண்டிதர் விரும்பி “கருணாமிர்த சாகரத்திரட்டு” என்னும் இசைப்பயிற்சி நூலை 1907இல் வெளியிட்டார். “தாய்மொழியில்தான் பாடல் வரிகள் அமையவேண்டும் என்று முதன் முதலாகச் சொன்னவர் இவரே.
முத்தமிழ் வித்தகரான அருள்திரு விபுலானந்த அடிகளார், தமிழிசைக்கு ஆற்றிய தொண்டுகள் அளவிறந்தன. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இசைத்தமிழ் முன்னோடிகளுள் இவரும் ஒருவர். விபுலானந்தரின் ஆராய்ச்சிகளுள் கொடுமுடியாக விளங்குவது யாழ் நூல். சமயப்பணியையும், தமிழ்ப்பணியையும் அடிகளார் செய்துகொண்டு யாழ் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார். இவர் தெய்வத்திற்கும் தாய் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் பாடியவர். மொழி பல கற்றுச் சிறந்தாலும் தாய் மொழியாகிய தமிழ் மேல் அன்பு கொண்டு, அதனைப் பயின்று, நன்கு தேர்ச்சிப் பெற்று, அதில் காணும் குறைபாட்டைத் தம் உணர்வாலும் ஆராய்ச்சித் திறனாலும் நிரப்பிச் செம்மை செய்து தமிழ் மொழிக்கு ஆக்கம் தந்தவர் ஆவார் இவர்.அவர் பத்தாண்டுகளாக ஆராய்ந்து கண்டுணர்ந்த இசைநூலான யாழ்நூலினைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்து ஆதரவில் அரங்கேற்றினார். அடிகளார் இசைத்தமிழ் நூலான யாழ் நூல் மட்டுமின்றி மதங்க சூளாமணி என்னும் நாடக நூலினையும் வெளியிட்டுள்ளார். மேலும் இவரது படைப்புக்களாகக் கட்டுரைகளும் கவிதைகளும் வெளிவந்துள்ளன. இவருடைய கவிதைகளுள் இறைவனைப் போற்றிப் பாடப்பட்ட பாடல்களும் ஈழத்தைப் பற்றியப் பாடல்களும் அறக்கருத்துகள் உள்ள பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றைத் தேர்வு செய்து இசைப்பாடல் வடிவில் அமைத்துக் கற்பிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம். ஆதலால் ஆர்வமுள்ளோர் நாங்கள் நடத்தும் இவ்வகுப்பில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் மொழி போல் தமிழிசையும் தொன்மை உடையது. 17, 18ஆம் நூற்றாண்டுகளில், தமிழிலேயே பாட்டு எழுதி, தமிழிலேயே பாடி தமிழிசையை வளர்த்த ஆதி தமிழிசை மும்மணிகள் அல்லது தமிழிசை மூவர் அல்லது சீர்காழி மூவர் என அழைக்கப்படுவோர் அருணாச்சலக் கவிராயர், முத்துத் தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப் பிள்ளை எனும் மூன்று பெருமக்கள் ஆவார்கள். ஆதி தமிழிசை மூவரே கிருதி என்று அழைக்கப்படும் கீர்த்தனைகளுக்கு வடிவம் கொடுத்தோர். இன்று உள்ள பல்லவி, அனுபல்லவி, சரணம் அல்லது எடுப்பு, தொடுப்பு, முடிப்பு எனும் அமைப்பு இவர்களின் பாடல்களில் காணக்கிடைக்கின்றன. அருணாசலக் கவிராயர்: இவரது படைப்புகளில் ஒன்றான இராம நாடகக் கீர்த்தனை என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. இக்கால இசை நிகழ்ச்சிகளிலும் நாட்டிய நிகழ்ச்சிகளிலும் இராம நாடகக் கீர்த்தனைகள் பாடப்பெறுகின்றன. முத்துத் தாண்டவர்:இவர் தமிழிசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய முன்னோடி. தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து கிருதி வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில் முத்துத்தாண்டவர் இருந்ததால், இந்த முன்னேற்றத்தில் இவருக்கும் பெரும் பங்கு உண்டு. எனவே இவர் கீர்த்தனை மரபின் பிதாமகர் என்றே கருதப்படுகின்றார். இவரது- “அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே”, “காணாமல் வீணிலே காலம் கழித்தோமே” பாடல்கள் மிகவும் பெருமை மிக்கவை. மாரிமுத்தாப் பிள்ளை: இவர் பல இசைப்பாடல்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசைக்கலையின் முன்னோடி. இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. சிதம்பரம் நடராஜர் மீதான பல பாடல்களை இவர் இயற்றியுள்ளார். மாரிமுத்தாப் பிள்ளையின் இசைப் பாடல்கள் பல இன்றும் இசை நிகழ்ச்சிகளில் இசைக்கப்பட்டு வருகின்றன. இவருடைய “காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே கை தூக்கி ஆள் தெய்வமே’’ எனும் பாடல் மிகவும் பெருமை வாய்ந்தது. எனவே நாங்கள் ஆதித் தமிழிசை மும்மணிகளின் பாடல்களைக் கற்பிப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம். ஆதலால் ஆர்வமுள்ளோர் நாங்கள் நடத்தும் இவ்வகுப்பில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் மொழி
©2024 உலகத் தமிழிசைப் பல்கலைக்கழகம் – அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை